சுபமுகூர்த்தம், கெட்டவேளையுண்டு. சில நேரங்கள் நல்லவை. வேறு சில நேரம் கெட்டவை. நல்ல நேரம் நல்லதைச் செய்யும். கெட்ட நேரம் கெட்டதைச் செய்யும், என்பது உலகம் உணர்ந்த உண்மை. ஸ்ரீ அரவிந்தம் இக்கூற்றை ஏற்க மறுக்கிறது. ஏனெனில், இதற்கு எதிரான அனுபவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு உண்டு. எதிரானதும் ஒரு நேரம் உண்மை என்பதால், மேற்கூறியது பொய்யாகாது. மேற்கூறியது அதை நம்புபவர்கட்கு உண்மை. நாமறிந்தவற்றை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. நல்லவை
2. கெட்டவை
3. நம்மைப்பொருத்து நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அமைவன.
பால் அமிர்தம், எல்லோருக்கும் நல்லது. எட்டிக்காய் கசப்பு, விஷம், அனைவருக்கும் கெட்டது. கத்தியின் பலன், உபயோகத்தைப் பொருத்தது. கத்தியை உபயோகப்படுத்தத் தெரிந்தவருக்கு பலன் உபயோகத்தைப் பொருத்தது. தெரியாதவனுக்குக் கத்தி தவறாமல் கையை வெட்டும். நம் நிலையுயர்ந்தால் கருவியின் பலனை நாமே நிர்ணயிக்கலாம். நேரம் என்பது மனத்தால் ஏற்பட்ட கருவி, காலம் எனப்படும். காலமும், நேரமும் மனத்திற்குட்பட்டவை. நேரத்தின் தன்மையைவிட மனம் உயர்ந்துவிட்டால், நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கும் திறன் மனத்திற்கு வரும். மனம் மேலும் உயர்ந்து உயர்ந்த மனமாகிவிட்டால், அம்மனம் செயல்படும் நேரம் சுபமுகூர்த்தமாகும். நேரத்தால் மனிதன் பாதிக்கப்படுவதற்குப் பதில், மனத்தின் உயர்வால் நேரம் உயர்வாகும்.